×

அதிமுக, பாஜ கூட்டணி சிதறு தேங்காய் போன்றது மோடி பாய் போட்டு படுத்தாலும் பாஜ டெபாசிட் வாங்காது: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

பெரம்பூர்: மோடி தமிழகத்தில் பாய் போட்டு படுத்தாலும் பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு, கண்டது முதல்வரின் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பகுதி செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக முதன்மைசெயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஒரு காலத்தில் தமிழகத்தின் பக்கமே வராத மோடி, இப்போது அடிக்கடி வருகிறார். அவர் இங்கே பாய் போட்டு படுத்தாலும் பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் திமுக கூட்டணி கம்பீரமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜ கூட்டணி கோயிலில் உடைக்கும் சிதறு தேங்காய் போல் உள்ளது. பாஜ, அதிமுக கூட்டணியில் தரகு வேலை நடந்து வருகிறது‌. போதைப் பொருளை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பிரச்னை வந்தபோது யார் ஆட்சி நடந்து வந்தது. அதன் மீது சிபிஐ விசாரணை நடந்து, தற்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் விஜயபாஸ்கர் தான் முதல் ஆளாக உள்ளார். போதைப் பொருள் கிடைக்க அடிப்படை காரணம் மோடி அரசுதான் என்று அண்ணாமலைக்கு தெரியுமா?

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்றும் முயற்சி தான் குடியுரிமை திருத்த சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரே ராமர் கோயில் பிரதிஷ்டையில் ஈடுபட்டால், இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது? எடப்பாடி பழனிசாமி எந்த பகல் வேஷம் போட்டாலும் மக்கள் அதிமுகவை நம்ப மாட்டார்கள். துரை வைகோ பேசியதாவது: ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். தொலைநோக்கு திட்டங்களுடன் முதல்வர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிமுக, பாஜ பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய நாட்டின் சூழல் மதவாத சக்திகள் தமிழகத்தில் வளரும் சூழ்நிலை வந்துள்ளது. இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படபோகிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை காக்க வேண்டியது நம் ஒவ்வொருரின் கடமை.
கே.எஸ்.அழகிரி பேசியதாவது: ஒரு அரசாங்கம் மதச்சார்பற்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். பிரதமர் பூச்சாண்டி வேலை காட்டிக்கொண்டிருக்கிறார். அதிமுக, பாஜ கூட்டணியை போல இல்லாமல் தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது.

ஒரே தராசில் ஒரு பக்கத்தில் பாஜ கூட்டணி கட்சிகளும், மற்றொரு பக்கத்தில் திமுகவுடனான இந்தியா கூட்டணி கட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதில் திமுக கூட்டணி கட்சியான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெறும். ஏனெனில் நீண்ட நெடுங்காலமாக திமுக உடனான கூட்டணி மிகவும் சுமுகமான முறையில் தமிழ்நாடு முதல்வரால் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா, செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அதிமுக, பாஜ கூட்டணி சிதறு தேங்காய் போன்றது மோடி பாய் போட்டு படுத்தாலும் பாஜ டெபாசிட் வாங்காது: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP alliance ,BJP ,Modi ,K. Balakrishnan ,Perambur ,State secretary ,Marxist Communist Party ,Tamil Nadu ,Chennai East District ,DMK ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...